/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை சாலையில் உதவும் மையங்கள்
/
கடற்கரை சாலையில் உதவும் மையங்கள்
ADDED : மே 05, 2024 03:27 AM
கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் உதவும் மையங்கள் போலீசாரால் ஏற்படுத்தப்பட உள்ளன.
புதுச்சேரி நகரம் அழகான கடற்கரை பகுதிகள், சாலைகள், நேர்த்தியான தெருக்கள் என பல பெருமைகளை உள்ளடக்கியதாக உள்ளது. பிரெஞ்சு கட்டிடக் கலையைப் பறைசாற்றும் புராதன கட்டடங்கள் நிறைந்துள்ளது. இதனால் தான் புதுச்சேரி விரும்பி பார்க்க வருகின்றனர்.
புதுச்சேரியில் பொழுது போக்கிற்கான முக்கிய இடங்களில் அழகான கடற்கரையும் ஒன்று. நகரின் சாலைகள் அனைத்து ஒரே நேர்கோர்ட்டில் அமைந்துள்ளன. எந்த சாலையில் சென்றாலும் அது கடற்கரை சாலையில் தான் முடியும்.
தலைமை செயலகம் முதல் டூப்ளே சிலை வரை 1.5 கி.மீ., தொலைவிற்கு நீண்டுள்ள கடற்கரை சாலை கொள்ளை அழகு. கடற்கரையொட்டி சாலையில் ரசித்தபடி நடந்து செல்வது சுற்றுலா பயணிகளுக்கு தனி அனுபவம்.
ஆனால் கடற்கரை சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ எந்த உதவி மையங்களும் இல்லை. ஏதேனும் அவசர உதவிக்கு யாரை கூப்பிடுவது, யாரை அணுகுவது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
இது குறித்து டி.ஜி.பி., கவனத்திற்கு சென்றதை தொடர்ந்து, கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் உதவி மையங்களை, ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக சட்ட ஒழுங்கு போலீசார் இந்த மையங்களை ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, விரைவில் புதுச்சேரி போலீசார், எக்ஸ் கியூஸ் மீ, நான் உங்களுக்கு உதவலாமா என்று கனிவாக குரல் கொடுத்து சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்ட உள்ளனர்.
இது தொடரனும்...
கடற்கரை சாலையில் இதுபோன்று ஏற்படுப்பட்ட உதவி மையங்கள், அதே வேகத்தில் காணாமல் போய்விடுகின்றன.
இந்த இரண்டு உதவி மையங்களாவது நிரந்தரமாக ஏற்படுத்துவதோடு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் இணைத்து ஏற்படுத்த வேண்டும் என்பதே திர்ப்பார்ப்பாக உள்ளது.