/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல் படை வீரர் தேர்வு; 4,019 பேர் பங்கேற்பு
/
ஊர்க்காவல் படை வீரர் தேர்வு; 4,019 பேர் பங்கேற்பு
ADDED : ஜூலை 01, 2024 06:39 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஊர்காவல்படை வீரர் பணிக்கான எழுத்து தேர்வில், 4,019 பேர் பங்கேற்றனர்.
புதுச்சேரி போலீசில் 420 ஆண், 80 பெண் ஊர்காவல்படை வீரர்கள் தேர்வுக்கு ஆண்கள் 15,697 பேர், பெண்கள் 4,492 பேர் விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த பிப்.,யில் நடந்தது. ஆண்கள் 3,034 பேர், பெண்கள் 1,195 பேர் என, மொத்தம் 4,229 பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று காலை 10:00 முதல் 12:00 மணி வரை நடந்தது.
ஆண்கள் 2,908 பேர், பெண்கள் 1,111 பேர் என, 4,019 பேர் தேர்வு எழுதினர். ஆண்கள் - 126; பெண்கள் - 84 பேர் என 210 பேர் ஆப்சென்ட்.
காந்தி வீதி பெத்திசெமினார், பாரதிதாசன் கல்லுாரி, இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா, லாஸ்பேட்டை வள்ளலார் பெண்கள் பள்ளி, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், தாகூர் கல்லுாரி, பெண்கள் பொறியியல் கல்லுாரி, உப்பளம் இமாகுலேட் பள்ளி என, 12 மையங்களில் தேர்வு நடநத்து.
தேர்வை கண்காணிக்க 500 அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தேர்வர்கள் பெரும்பாலானோர், காலை 8:30 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்தனர். ஹால் டிக்கெட்டுடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் அசல் சரி பார்க்கப்பட்டே, தேர்வர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பயோ மெட்ரிக் வருகைப்பதிவு செய்யப்பட்டது.
தேர்விற்கான விடைகள், https://recruitment.py.gov.in, என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், மாற்றுக்கருத்து இருந்தால், இன்று தெரிவிக்கலாம். ஓரிரு தினங்களில், தேர்வு முடிவுகள் வெளியாகும்.