ADDED : ஜூலை 12, 2026 11:42 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பெண் குழந்தைகளை காக்கும் பொருட்டு, சுகாதாரத்துறையின் மூலம் சிறப்பு எச்.பி.வி., தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை மூலம் 14 வயது பெண் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் எச்.பி.வி., சிறப்புத் தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சிறப்பு முகாம்கள் நேற்று (12ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடந்தது.
அதன்படி, ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த சிறப்பு முகாமில், மருத்துவ பொறுப்பு அதிகாரி மதன் தலைமை தாங்கி, பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.
இதில், அப்பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 18 பெண் குழந்தைகள் எச்.பி.வி., தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சுகாதார நிலைய கிராமப்புற செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் உடனிருந்தனர்.
தொடர்ந்து, வரும் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பெண் குழந்தைகளுக்கான எச்.பி.வி., சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
