ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் அமைச்சர் ராஜவேலு அறிவிப்பு
ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் அமைச்சர் ராஜவேலு அறிவிப்பு
ADDED : ஆக 31, 2026 07:41 PM
புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கையின்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் ராஜவேலு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை முழுமையான கல்விக் கட்டணத்தை வழங்கும் திட்டம், 2026–27ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கும் அனைத்து ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.
இருளன்சந்தை, அரியூர் மற்றும் சுத்துக்கேணி பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தகுதியான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பு ஆண்டிலேயே இலவச வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்படும். கோர்க்காட்டில் நிலமற்ற பழங்குடியினருக்கு மனை வழங்க நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 1,150 பயனாளிகளுக்கு ரூ.15.95 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மேலும் 2,500 பயனாளிகளுக்கு ரூ.29.15 கோடி வழங்கப்படும். இலவச மனைப்பட்டா வழங்குவதில் சிரமங்கள் உள்ளதால் அவர்களே தனியாரிடம் மனை வாங்க ரூ.10 லட்சம் வரை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் மத்திய தேர்வாணைய தேர்வில் அதிகளவில் வெற்றி பெறும் நோக்கில், தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவர்களுக்கு பிரபல அகாடமி மூலம் இலவச ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுப் பயிற்சி, உணவு, தங்குமிடம் மற்றும் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி பெறும் ஒவ்வொரு மாணவருக்கு, 10 மாத பயிற்சி கட்டணமாக 90,000 ரூபாயும், உணவு மற்றும் இருப்பிட செலவுக்காக மாதம் 10,000- ருபாய் என மொத்தம் ஒரு மாணவருக்கு 1.90 லட்சம் ருபாய் வழங்கப்படும்.
