/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூத்துறை சாலையில் புழுதி புயல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
/
பூத்துறை சாலையில் புழுதி புயல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
பூத்துறை சாலையில் புழுதி புயல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
பூத்துறை சாலையில் புழுதி புயல் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 28, 2024 03:44 AM

வானூர் : பூத்துறையில் இருந்து, வழுதாவூர் சாலை வரையிலான 2 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து, பூத்துறை வழியாக, ஊசுடு (புதுச்சேரி - வழுதாவூர் ரோடு) வரையிலான சாலை 7 கி.மீ., துாரத்தை கொண்டுள்ளது. இதில், 5 கி.மீ., துார சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை வசமும், எஞ்சிய 2 கி.மீ., துார சாலை ஊராட்சியிடமும் உள்ளது.
இந்த சாலையில் உள்ள மணவெளி, பட்டானுார், காசிப்பாளையம், பூத்துறை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பூத்துறை சாலை வழியாக மேட்டுப்பாளையம் மற்றும் அய்யங்குட்டிப்பாளையத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், இந்த சாலை வழியாக பெரம்பை, வில்லியனுார், விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு விரைவில் செல்ல முடியும் என்பதால், தினசரி ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலை புதுப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து, பூத்துறை வரையிலான 5 கி.மீ., துாரத்திற்கு 5.50 மீட்டர் சாலையாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்ரோட்டில் இருந்து காசிப்பாளையம் வரை 4 கி.மீ., தூரத்திற்கு கல்வெர்ட் மற்றும் தார் சாலை அமைக்கப்பட்டு, வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகின்றன. மீதமுள்ள ஒரு கி.மீ., துாரத்திற்கு விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.
எஞ்சியுள்ள ஊராட்சி சாலையான பூத்துறையில் இருந்து, வழுதாவூர் சாலை சந்திப்பு வரையிலான 2 கி.மீ., துார சாலையை புதிதாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மூலமாக, நபார்டு உதவியோடு ரூ. 78.25 லட்சம் மதிப்பீட்டில் 1.350 மீட்டர் தூரத்திற்கு (வழுதாவூர் சாலை வரை ) தார் சாலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மார்ச் முதல் வாரத்தில், தார் சாலை அமைக்கும் பணிக்கு கருங்கற்கள் கொட்டி நிரப்பி, இருமுறை (டூ லேயர்) கிரஷர் மற்றும் ஜல்லி கலந்து சாலையில் கொட்டி ஜே.சி.பி., மூலம் சமன் செய்தனர். பணி துவங்கிய ஒரு வாரத்தில் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகியும் வருகிறது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து பூத்துறை வரையிலான 7 கி.மீ., சாலையில், நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 கி.மீ., சாலையில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது. ஆனால், ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய 2 கி.மீ., துாரத்திற்கு ஒவ்வொரு முறையும் பெயரளவிற்கு போடும் சாலை 6 மாதங்கள்கூட தாக்குப்பிடிப்பதில்லை.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதால், சாலை தரமாக அமைகிறது. அதனால், எஞ்சிய 2 கி.மீ., துார சாலையையும் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் குகன் கூறுகையில், 'சாலை அமைக்கும் பணி, தேர்தல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலை எல்லை முடிவில் இருந்து 650 மீட்டர் துாரத்திற்கு சாலை அமைக்க நபார்டு நிதி ஒதுக்கீடு செய்யாததால், இடையில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில், முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ், சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிவு வந்தவுடன் தார் சாலை அமைக்கப்படும்' என்றார்.