/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் என பல கோடி மோசடி: புதுச்சேரியில் அமலாக்கத்துறை விசாரணை
/
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் என பல கோடி மோசடி: புதுச்சேரியில் அமலாக்கத்துறை விசாரணை
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் என பல கோடி மோசடி: புதுச்சேரியில் அமலாக்கத்துறை விசாரணை
ஏ.ஐ., தொழில்நுட்ப டிரேடிங் என பல கோடி மோசடி: புதுச்சேரியில் அமலாக்கத்துறை விசாரணை
ADDED : செப் 03, 2024 06:53 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் டிரேடிங் செய்து லாபம் ஈட்டி தருவதாக கூறி பல கோடி சுருட்டிய கும்பல் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி, கருவடிக்குப்பம் நாகம்மாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா மனைவி கோகிலா,38; செவிலியர். ஆன்லைனில் டிரேடிங் செய்யலாம் என பேஸ்புக்கில் தனது மொபைல் எண்ணை பதிவிட்டார்.
இவரை, கடந்த ஆண்டு செப்., மாதம் போனில் தொடர்பு கொண்ட நபர், குலோபல் சாப்ட்வேர் சொல்யூசன், அல்கோ மாஸ்டர் டிரேடிங் கம்பெனியில் வேலை செய்வதாக கூறி ஏ.ஐ., தொழில்நுட்ப சாப்ட்வேரில் முதலீடு செய்ய அறிவுறுத்தினார். அதன்பேரில், கோகிலா முதலில் ரோபாட்டிக் சாப்ட்வேர் வாங்க ரூ. 38 ஆயிரம் பணம் செலுத்தினார். தொடர்ந்து 67 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 18 லட்சம் செலுத்தியும், லாபம் ஏதும் வரவில்லை.
இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார், பெங்களூரிவில் பதுங்கியிருந்த முகமது அன்சாரை கைது செய்தனர். அவர் போலியாக நடத்தி வந்த கால்சென்டரை ஆய்வு செய்து, அங்கிருந்த பொருட்களை பறிமுதல் செய்து கர்நாடகா போலீசிடம் ஒப்படைத்தனர்.
பெங்களூருவில் அலுவலகம் நடத்திய பிரவீன், குறிஞ்சிப்பாடி ஜெகதீஷ், நெய்வேலி தவுபில் அகமது, ராமச்சந்திரன், பிரேம் ஆனந்த், விமல்ராஜ் ஆகியோர் கைது செய்ததுடன், நெய்வேலியில் என்.டி.எஸ்., குருப் ஆப் கம்பெனி பெயரில் நடந்து வந்த போலி கால் சென்டரில் சோதனை செய்து கம்ப்யூட்டர்கள், சொகுசு கார், வேன் உள்ளிட்ட ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் துபாயை தலைமை இடமாக கொண்டு, நெய்வேலி, நாமக்கல், பெங்களூர், மும்பை, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் அலுவலகம் அமைத்து 200க்கும் மேற்பட்டோரை பணி அமர்த்தி ஆயிரக்கணக்கான மக்களிடம் கடந்த 2014ம் ஆண்டு முதல் மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இந்த கும்பலிடம் 64 வங்கி கணக்கு இருப்பதும், அதில் 3 கணக்குகளில் மட்டும் கடந்த 9 மாதங்களில் மோசடி செய்த பணமாக ரூ. 56 கோடி வந்துள்ளது. ஒரு வங்கி கணக்கில் மட்டும் ரூ. 27 கோடி பணம் இந்திய முழுதும் உள்ள சைபர் கிரைம் போலீசார் முடக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடிகளின் முக்கிய குற்றவாளியான நெய்வேலி நவ்ஷத்கான் அகமது உள்ளிட்ட 5 பேர் துபாயில் பதுங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அளித்த தகவலின் பேரில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் புதுச்சேரிக்கு வந்து, போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்களா, சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., பாஸ்கரை சந்தித்து பேசினர். அப்போது, மெகா மோசடி கும்பலின் வங்கி கணக்குகளில் உள்ள பண விபரம், பரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களை திரட்டினர். மேலும் துபாயில் பதுங்கி உள்ள நவஷ்சத்கான் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.