/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரத்தை துளையிட்டு 'ஆசிட்' ஊற்றிய மர்ம நபர்கள்
/
மரத்தை துளையிட்டு 'ஆசிட்' ஊற்றிய மர்ம நபர்கள்
ADDED : ஏப் 03, 2024 07:17 AM

புதுச்சேரி : புதுச்சேரி மிஷன் வீதியில் பல ஆண்டுகளாக நிழல் தந்த மரத்தை மர்ம நபர்கள் துளையிட்டு ஆசிட் ஊற்றியதால், சாலையில் முறிந்து விழுந்தது. இதில், பைக்கில் சென்ற வாலிபர் காயமடைந்தார்.
புதுச்சேரி மிஷன் வீதியில் நிழல் தரும் மரங்கள் வரிசையாக உள்ளது. இந்த மரங்கள் சாலையோரம் வியாபாரம் செய்வோருக்கும், வணிக நிறுவனங்களுக்கும் இடையூறாக இருப்பதால் பலர் மரங்களை இரவோடு இரவாக வெட்டி அகற்றி விடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 9:35 மணிக்கு, வா.உ.சி. பள்ளி எதிரில் இருந்த 40 ஆண்டு பழமையான மதிமாங்கா என்ற மரம் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.
அப்போது சாலையில் ஸ்கூட்டரில் சென்ற லாஸ்பேட்டை அசோக் நகரைச் சேர்ந்த இளவரசன், 35; என்பவர் மரத்தின் கீழ் சிக்கி கொண்டார். பொதுமக்கள் வாலிபரை மீட்டனர்.
காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மரம் முறிந்து விழுந்ததில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 3 பைக்கள் மற்றும் இளவரசன் பைக் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த உப்பளம் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
எப்போதும் பிசியாக இருக்கும் மிஷன் வீதியில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
பகல் 12:00 மணிக்கு மரம் முழுதும் வெட்டி அகற்றப்பட்ட பின், போக்குவரத்து துவங்கியது.
மழையோ, புயல் காற்றே இல்லை. இந்நிலையில் பச்சை பசேலேன இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்தது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த வனத்துறை மரம் முறிந்து விழுந்த இடத்தில் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
முறிந்து விழுந்த மரத்தின் அடிபாகத்தை ஆய்வு செய்தபோது, மரத்தில் பெரிய அளவில் துளையிட்டு, ஆசிட் ஊற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
மரத்தில் ஆசிட் ஊற்றிய பாகங்கள் மற்றும் ஆசிட் தடயங்களை ஆய்வுக்காக வனத்துறையினர் சேகரித்து சென்றனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மரத்திற்கு ஆசிட் ஊற்றி கிழே விழ வைத்த தகவல் வந்ததும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாதிரிகள் சேகரித்துள்ளனர்.
முழு விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது சம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தனர்.

