UPDATED : ஜூலை 21, 2026 07:09 PM
ADDED : ஜூலை 21, 2026 05:51 PM
புதுச்சேரி: காந்தி திடலில் நரிக்குறவர்களின் கடைகளை அடித்து சேதப்படுத்திய ரவுடிகளை கைது செய்யக் கோரி பெரியகடை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு நரிக்குறவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கடற்கரை சாலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்குள்ள காந்தி திடலில் நரிக்குறவர்கள் சிலர் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் விற்பனை கடைகள் அமைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் கடற்கரைக்கு வரும் ரவுடிகள் சிலர், மதுபோதையில் கடைகள் வைத்துள்ள நரிகுறவர்களிடம் மாமூல் கேட்டு தகராறு செய்வதுடன், மாமூல் தர மறுப்பவர்களை ஆபாசமாக திட்டி, தாக்குவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காந்தி திடலில் கடை வைத்திருந்த நரிகுறவர்களிடம் ரவுடிகள் சிலர் மாமூல் கேட்டு கடைகளை சேதப்படுத்தியதுடன், அவர்களை கையால் தாக்கியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட நரிகுறவர்கள் நேற்று காலை 11:00 மணிக்கு பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, மாமூல் கேட்டு கடைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசாா் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கடைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து நரிகுறவர்கள், ரவுடிகள் மீது புகார் அளித்துவிட்டு சென்றனர்.
