ADDED : ஜூலை 14, 2026 10:42 PM

புதுச்சேரி: இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் வழி அறிவியல் திறனறித் தேர்வு முன்னெடுப்பான ‘வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்(வி.வி.எம்) திட்டத்தின் 2026–27 ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ தகவல் கையேடு புதுச்சேரி காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழக (என்.ஐ.டி.) வளாகத்தில் வெளியிடப்பட்டது.
புதுச்சேரி என்.ஐ.டி. இயக்குனர் மகரந்த் மாதவ் காங்கிரேக்கர் கையேட்டை வெளியிட அதன் முதல் பிரதியை இயற்பியல் துறை பேராசிரியர் டாக்டர் அம்ரித் பிடே பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சயில் டெல்லி சி.சி.ஆர்.டி., பிரதிநிதி வினோத் குமார் மற்றும் புதுச்சேரி மாநில சி.சி.ஆர்.டி., துாதர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து வி.வி.எம். அமைப்பின் புதுச்சேரி பிராந்திய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் சுவாமி பேசுகையில், கடந்த 2025–26 கல்வி ஆண்டில் மட்டும் இப்பகுதியைச் சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை ஒத்துழைப்புடன் வள்ளலார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான முகாமில் போட்டியிட்ட 42 பள்ளிகளை சார்ந்த 200 மாணவர்களில், 12 சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஐ.ஐ.டி அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.
அதில் இரண்டு மாணவர்கள் தேசிய அளவில் உயரிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், தேசிய அளவில் புகழ் பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள விஞ்ஞானிகளின் துணையோடு தங்களது விருப்பமான ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்ள வழிகாட்டப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் முழுவதும் உள்ள மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஆழமாக விதைக்கும் நோக்கில், வரும் 2026–27ம் ஆண்டிற்கான பதிவில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை இணைக்க விஞ்ஞான் பாரதி அமைப்பு இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.
