பிறப்பு - இறப்புச் சான்றிதழில்...புதியநடைமுறை: உள்ளாட்சி துறை அறிவிப்பு
பிறப்பு - இறப்புச் சான்றிதழில்...புதியநடைமுறை: உள்ளாட்சி துறை அறிவிப்பு
UPDATED : ஜூலை 13, 2026 02:36 AM
ADDED : ஜூலை 12, 2026 09:20 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் பிறப்பு மற்றும் இறப்புகளைப் பதிவு செய்யும் நடைமுறைகளில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த குடிமைப் பதிவு முறை - போர்டல் கடந்த 01.11.2025 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் தங்களது பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய வழிமுறைகள் உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்.
முந்தைய பதிவுகள்:
கடந்த 31.10.2025 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிகழ்ந்த பிறப்பு மற்றும் இறப்புகள் தொடர்பான சான்றிதழ்களைப் பெற விரும்பும் பொதுமக்கள், வழக்கம் போலத் தங்களது சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகத்தையோ அல்லது கொம்யூன் பஞ்சாயத்தையோ அணுகலாம். பொது சேவை மையங்கள் மூலமாகவும் இவற்றைத் தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளவும் இனி முடியும்.
முந்தைய பிறப்பு மற்றும் இறப்பு தகவல் அமைப்பு தளத்திலிருந்து, புதிய சி.ஆர்.எஸ்., போர்டலுக்குத் தரவுகள் மாற்றப்பட்டதால், திருத்தங்கள் செய்வதில் தற்காலிகத் தடை இருந்தது. தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டு, திருத்த வசதி மீண்டும் தொடங்கிவிட்டது. எனவே, பழைய பதிவுகளில் திருத்தம் தேவைப்படுபவர்கள், தகுந்த ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட நகராட்சி அல்லது கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.
புதிய நடைமுறை::
01.11.2025 மற்றும் அதற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு அரசு ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் சி.ஆர்.எஸ்., சான்றிதழ் பதிவிறக்கப் பக்கத்திற்கு சென்று, தங்களின் யூனிக் ரெபரன்ஸ் நெம்பர் எனும் தனித்துவமான குறிப்பு எண் மற்றும் பதிவு விவரங்களை உள்ளீடு செய்து, மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., மூலம் எளிதாகச் சான்றிதழைப் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
இணையதளம்::
மேலும், https://crsorgi.gov.in/ என்ற பொதுவான போர்ட்டலிலும் பிற சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பதிவுகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருப்பின், சி.ஆர்.எஸ்., போர்ட்டல் வழியாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகத்தை நேரில் அணுகலாம். திருத்தம் அங்கீகரிக்கப்பட்டதும், புதிய சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என உள்ளாட்சி துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு...:
சி.ஆர்.எஸ், போர்ட்டலில் இருந்து பெறப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் செல்லுமான என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து உள்ளாட்சி துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, சி.ஆர்.எஸ்,., போர்டலில் பெறப்படும் பிறப்பு-இறப்பு சான்றிதழ் அதிகாரப்பூர்வமானவை. இந்தச் சான்றிதழ்கள் வண்ணத்திலோ அல்லது கருப்பு-வெள்ளையிலோ இருந்தாலும் அவை செல்லுபடியாகும்.
சான்றிதழின் தோற்றத்தை விட, அதில் உள்ள விவரங்கள் மற்றும் கியூ.ஆர் குறியீடு ஆகியவையே மிக முக்கியமானவை. இதைச் சரிபார்த்து ஏற்றுக்கொண்டு, பொதுமக்களுக்கு உரிய சேவைகளை வழங்குமாறு அனைத்துத் துறை அலுவலகங்களுக்கும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, சான்றிதழ்களின் வண்ணம் அல்லது வடிவம் குறித்த வதந்திகளையோ, தேவையற்ற குழப்பங்களையோ பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம். பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், தயங்காமல் தங்கள் பகுதிக்குட்பட்ட நகராட்சி அல்லது கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றனர்.
