‘தி.மு.க., சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
‘தி.மு.க., சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு
ADDED : செப் 05, 2026 11:41 PM

புதுச்சேரி, செப். 6–
அமைப்புச் சாரா தொழிலாளர் காங்., புதுச்சேரி தலைவராக பிரபுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை அமைப்பின் தேசியசெயற்குழு உறுப்பினர் சக்தி சிவகுமார் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி காங்., தலைமை அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், பங்கேற்ற காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கூறியதாவது:
தனக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக அடிக்கடி மாநில அந்தஸ்து பிரச்னையை கையில் எடுக்கும் முதல்வர் ரங்கசாமி, மற்றவர்களுக்கும் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும்.
அதற்காகதான் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இந்த் தேர்தலின் வாயிலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவிக்கு வர முடியும். புதுச்சேரியில் மாநில தேர்தல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது.
இதைத் தவிர சாதி வாரி கணக்கெடுப்புக்காக நியமிக்கப்பட்ட கமிஷன் அறிக்கை அளித்தும் அதை வெளியிடாமல் புதுச்சேரி அரசு இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அதனால் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 3 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக் பகுதியில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் உயர்நீதிமன்ற கிளையை அமைக்காமல் இருப்பது ஏன். இதையெல்லாம் வலியுறுத்தும் வகையில் காங்., சார்பில் மாநாடு மற்றும் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.
தி.மு.க., சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. அவர்களுக்கு ஆளும் கட்சி யார், எதிர்க்கட்சி யார் என்பதே தெரியவில்லை’ என்றார்.
