ADDED : ஜூன் 06, 2026 09:31 PM
புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தலில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 13ம் முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவருடன் மொத்தமுள்ள 5 அமைச்சர்களில், பா.ஜ.,வை சேர்ந்த நமச்சிவாயம், என்.ஆர்.காங்., கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
இன்னும், மூன்று அமைச்சர் பதவி மற்றும் சபாநாயகர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் இதுவரை இலாகா ஒதுக்கீடு செய்யாததால், அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அதிகாரிகள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள இருவரும் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஆய்வு கூட்டம் நடத்துகின்றனர். யார் எந்த துறைக்கு அமைச்சர் என தெரியாத நிலையில், எப்படி அனைத்து தகவலையும் தெரிவிப்பது என, புரியாமல் அதிகாரிகள் புலம்பிக் கொண்டுள்ளனர். மேலும், எம்.எல்.ஏ.,க்கள் தினசரி ஏதேனும் ஒரு அலுவலகத்தில் ஆய்வு நடத்தி, அதை செய், இதை செய் என்கின்றனர். இதற்கான நிதிகளை யார் விடுவிப்பது, இதற்கு யாரிடம் ஒப்புதல் வாங்குவது என புரியாமல் அதிகாரிகள் இருதலை கொள்ளிகளாக தவித்துக் கொண்டுள்ளனர்.
