/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு
/
கோவில் இடம் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு
ADDED : ஆக 08, 2024 02:06 AM
புதுச்சேரி : வேதபுரீஸ்வரர் கோவில் இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக நேரு எம்.எல்.ஏ., தொடுத்த வழக்கில் நான்கு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சட்டசபையின் உறுதிமொழி கமிட்டி சேர்மன் நேரு எம்.எல்.ஏ., சென்னை கோர்ட்டில் வேதபுரீஸ்வரர் கோவில் தொடர்பாக மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், புதுச்சேரி வேதபுரீஸ்வர கோவிலுக்கு சொந்தமான இடம், காமாட்சியம்மன் கோவில் வீதியில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான இடத்தினை இருவர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். ஒருவர் வாடகைக்கு குடியிருக்கிறார். மற்றொருவர் அவரை காலி செய்ய சொல்லுகிறார்.
ஆனால், இடத்தின் உரிமையாளரான புதுச்சேரி இந்து சமய அறநிலைய துறை இடத்தினை மீட்காமல் உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு வேதபுரீஸ்வரர் கோவில் இடத்தினை மீட்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தலைமை செயலர், இந்து சமய அறநிலைய துறை செயலர், சார்பு செயலர், ஆணையர், வேதபுரீஸ்வரர் கோவில் நிர்வாகம் உள்பட 7 பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இந்த மனு அண்மையில் ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நான்கு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.