கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் திரிந்த நபர்கள் கைது
கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் திரிந்த நபர்கள் கைது
ADDED : ஜூன் 23, 2026 06:53 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்விரோதம் காரணமாக எதிரியை கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் சுற்றிய நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, வெங்கடசுப்ப ரெட்டியார் சதுக்கம் அருகே சிலர் கத்தியுடன் சுற்றி வருவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு கும்பல் போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றது. அதில், 2 பேரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், வில்லியனுார் அடுத்த உறுவையாறு, புதுநகரை சேர்ந்த குமார் மகன் சந்தோஷ்குமார், 23; அதேப்பகுதி முருகன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன், 20; என்பது தெரியவந்தது.
மேலும், உறுவையாறு பகுதியில் கடந்த ஆண்டு நடந்த பிரபல ரவுடி ஜீவாவின் அண்ணன் சவுந்தர் கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளிகளை கோர்ட்டிற்கு அழைத்து வரும்போது, அவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடம் இருந்த ஒரு கத்தி, பைக் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.
அவர்கள் மீது தனது எதிரியை கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் சுற்றியதாக வழக்குப் பதிந்து, போலீசார் கைது செய்தனர். அவர்களை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய சிலரை தேடி வருகின்றனர்.
