/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு; 2 பேர் கைது
/
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு; 2 பேர் கைது
ADDED : மே 29, 2024 05:25 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டையில் சிறையில் உள்ள வாலிபரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, பெரியார் நகர் 10வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ருத்ரேஷ், 27; பெயிண்டர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் தரப்பிற்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த மாதம் 23ம் தேதி, பெரியார் நகர் கெங்கைமுத்து மாரியம்மன் கோவில் எதிரில் நின்றிருந்த ருத்ரேைஷ, 6 பேர் கொண்ட கும்பல் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தது.
இது தொடர்பாக உருளையன்பேட்டை முருகன் கோவில் வீதி ஈஸ்வர், 23; கவுதம், 24; அரவிந்த், 22; எழில், 24, உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் உள்ள எழில், ஈஸ்வர் இருவரும் முருகன்கோவில் தெரு, 4வது குறுக்கு தெருவில் வசிக்கின்றனர். கடந்த 25ம் தேதி இரவு, பைக்கில் வந்த இருவர், எழில் வீட்டின் முன், பெட்ரோல் குண்டு வீசினர். தீப்பற்றி எரிந்த பெட்ரோல் குண்டு தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது.
உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் நெல்லித்தோப்பு, முருகன்கோவில் தெரு சாமுவேல், 21; கீழ்சாத்தமங்கலம், முருகன் கோவில் தெரு கணேஷ், 24; ஆகியோர் என, தெரிய வந்தது. உருளையன்பேட்டை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.