திடக்கழிவுகளை உருவாக்குவோர் அதனை வெளியேற்ற சான்றிதழ் பெறவேண்டும் மாசுகட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தல்
திடக்கழிவுகளை உருவாக்குவோர் அதனை வெளியேற்ற சான்றிதழ் பெறவேண்டும் மாசுகட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 06, 2026 10:33 PM
புதுச்சேரி: அதிக அளவிலான திடக்கழிவுகளை உருவாக்குவோர், அதனை முறையாக வெளியேற்றுவதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு குழுமம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் காலநிலை அமைச்சகம் திடக்கழிவு மேலாண்மை விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகள் உற்பத்தி செய்தல், கட்டட வளாகம் 20 ஆயிரம் சதுர மீட்டர் மற்றும் அதற்குல் மேல் இருத்தல், 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உபயோகிப்பவர்கள் அதிக அளவிலான திடக்கழிவு உருவாக்குவோர் பிரிவில் வருகின்றனர்.
அதில், மத்திய, மாநில கழிவு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், விடுதிகள், மருத்துவமனைகள், மொத்த சந்தைகள், விளையாட்டு அரங்கம், உணவகங்கள், சமூக மற்றும் மாநாட்டு கூடங்கள், திருமண மற்றும் விருந்து மண்டபங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் அடங்குகின்றன.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிகளின் அடிப்படையில் அதிக அளவிலான திடக்கழிவு உருவாக்குவோர் பிரிவில் வருபவர்கள் தங்களின் கழிவு முறையாக வெளியேற்றப்பட்டதாக நிரூப்பிக்கும் சான்றிதழ்களை பெற வேண்டும். இந்த சான்றிதழை பெற மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் உருவாக்கப்பட்ட https://swm.cpcb.gov.in இணைய தள போர்டலில் தங்களின் விவரங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.
அதில், அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்து, அதற்கான கட்டணத்தை செலுத்தி சான்றிதழை அந்தந்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்திடம் பெற்று கொள்ள வேண்டும். இந்த சான்றிதழை அனைவரும் உடனடியாக பெற வேண்டும். தவறுபவர்கள் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு தொகை வசூலிக்கப்படும்.
எனவே, அனைத்து உணவு விடுதிகள், கல்யாண மண்டபம், மருத்துவ மனைகள், அடுக்கு மாடி குடியிருப்புகள் தாங்களாகவே முன் வந்து தங்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
