தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு... ஜாக்பாட்!தொழில் துவங்க அனுமதியிலிருந்து விலக்கு புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வெளியீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு... ஜாக்பாட்!தொழில் துவங்க அனுமதியிலிருந்து விலக்கு புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வெளியீடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு... ஜாக்பாட்!தொழில் துவங்க அனுமதியிலிருந்து விலக்கு புதிய வழிகாட்டுதல் விதிமுறைகள் வெளியீடு


UPDATED : ஜூலை 06, 2026 11:44 PM

ADDED : ஜூலை 06, 2026 10:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 11:44 PM ADDED : ஜூலை 06, 2026 10:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி, ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து புதுச்சேரி அரசு புதிய விதிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு அளப்பரியது. தொழில் முனைவோர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால நிர்வாகச் சிக்கல்களைக் குறைக்கவும், எளிதாகத் தொழில் செய்யும் சூழலை மேம்படுத்தவும், புதுச்சேரி அரசு தற்போது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல்களிலிருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இனி சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் முதலில் தொழில் துவங்கிவிட்டு, மூன்றாண்டுகளுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து அனுமதி பெற்றால் போதுமானது. இதற்கான புதிய விதிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

புதிய நடைமுறை என்ன:

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் முன்பு ஒவ்வொரு துறையாக ஏறி இறங்கி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியெல்லாம் பெற்ற பிறகு தான் தொழில் துவங்க முடியும். இதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலில் தொழில் ஆரம்பிக்க நினைக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பிக்க வேண்டும். நிறுவனங்கள் தங்களின் தொழில் விவரங்களை படிவம்-Iல் உள்ளடக்கங்களாகச் சமர்ப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பதாரரின் விவரங்கள், நிறுவனத்தின் வகை, முதலீட்டு விவரங்கள் மற்றும் உற்பத்தி, சேவை சார்ந்த தகவல்கள் இடம் பெற வேண்டும்.

அடுத்ததாக அக்னாலேஜ்மென்ட் சர்டிபிகேட் எனும் பரிந்துரைப்புச் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். சரியான விவரங்களுடன் விண்ணப்பித்தவுடன், புதுச்சேரி தொழில் வழிகாட்டல் பணியகம் படிவம்-II-ல் உடனடி சான்றிதழை வழங்கும். இது ஒரு சட்டப்பூர்வமான அனுமதியாகக் கருதப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பல்வேறு துறைகளின் ஆய்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

விதிவிலக்குகள்:

இருப்பினும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு என வகைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது. இவை தற்போதைய நடைமுறைப்படியே அனுமதிகளைப் பெற வேண்டும்.

வழிகாட்டல் பணியகம்:

புதுச்சேரி தொழில் வழிகாட்டல் பணியகம் இந்த விதிகளின் கீழ் மிக முக்கியமான அமைப்பாகச் செயல்பட உள்ளது. விண்ணப்பங்களைப் பெறுதல், மின்னணு முறையில் சான்றிதழ்களை வழங்குதல், தொழில்முனைவோர்களின் குறைகளைத் தீர்த்தல், அரசுத் துறைகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும். ஏதேனும் முரண்பாடுகள் எழுந்தால், தொழில் மற்றும் வணிக இயக்குநரின் வழிகாட்டுதலுடன் சிக்கல்களைத் தீர்த்து வைக்கும்.

இந்த புதிய மாற்றங்கள் புதுச்சேரியின் தொழில் சூழலை முற்றிலும் மாற்றி அமைக்கும். இது சிறு, குறு, நடுத்தர முதலீட்டாளர்களை ஈர்ப்பதோடு, உள்ளூர் தொழில் முனைவோர்களுக்கும் சாதகமாக இருக்கும். இந்த எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறை, எதிர்காலத்தில் புதுச்சேரியை பெரிய தொழில் மையமாக உருவாக்க உதவும் என தொழில் துறையினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சுதந்திரம் மட்டும் அல்ல; பொறுப்பும் இருக்கு... தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், இருப்பினும் இந்த சுய சான்றிதழ் அளித்துவிட்டு தொழில் துவங்கலாம் என்பது முழு சுதந்திரம் அல்ல. தொழில் முனைவோர்கள் சில பொறுப்புகளை ஏற்க வேண்டும். குறிப்பாக தொழிலாளர் நலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்புத் தரங்களை உறுதி செய்ய வேண்டும். அடுத்து சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தவறான தகவல்கள் அல்லது உண்மைகளை மறைத்தல் கண்டறியப்பட்டால், வழங்கப்பட்ட சான்றிதழ் ரத்து செய்யப்படும். இருப்பினும் சான்றிதழ் ரத்து செய்வதற்கு முன்பு, 15 நாட்கள் அவகாசம் வழங்கி விண்ணப்பதாரருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றனர். -



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us