பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்கம் 22ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்கம் 22ல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 16, 2026 05:50 PM
புதுச்சேரி: புதுச்சேரி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்கம், தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 22ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்க அறிக்கை:
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 6 மாங்களுக்கு மேலாக பொது மக்களுக்கான போக்குவரத்து சேவை குறைந்துள்ளது. இதனால் பி.ஆர்.டி.சி.,யில் பணி புரியும் ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பணி மனையில் பஸ்கள் பராமரிப்பு தேவைக்கான டயர், ஆயில் பிரேக், பேட்டரி உள்ளிட்ட உதிரி பாகங்கள் இல்லாமல் உள்ளது. இங்கு பொதுமேலாளர் (இயக்குதல்) நியமிக்க வேண்டும்.
நிறுத்தப்பட்டுள்ள பஸ்களால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், நிரந்தர, தினக்கூலி, ஒப்பந்த மற்றும் வவுச்சர் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இ.பஸ்களை தனியார் முதலாளிகள் பயன்பெறும் வகையில் இயக்காமல், அதை பி.ஆர்.டி.சி., நிறுவனம் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
