ADDED : ஜூன் 03, 2024 04:40 AM
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் பாலாஜி நகரில் நுாற்றுாக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் பாலாஜி நகர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் நேற்று காலை 11:00 மணி வரை வரவில்லை. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனை கண்டித்து பாலாஜி நகர் மக்கள் நுாற்றுாக்கும் மேற்பட்டோர், நேற்று காலை 11:30 மணியளவில் ஏம்பலம் - வில்லியனுார் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த கரிக்கலாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், ஏம்பலம் - வில்லியனுார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
