ADDED : ஜூலை 30, 2026 08:32 PM
புதுச்சேரி: சம்பா பருவத்திற்கான விதை நெல்லை வேளாண்துறை உடனடியாக வழங்க வேண்டுமென புதுச்சேரி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் ரவி அறிக்கை:
புதுச்சேரி அரசு வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, சம்பா பருவத்திற்கான விதை நெல் பொன்னி, பொன்மணி, பி.பி.டி., நெல் ரகங்களை வேளாண் துறை வழங்கி இருக்க வேண்டும்.
ஆனால், ‘ஆடி 18’ இரண்டு நாளில் துவங்க உள்ள நிலையில் இதுவரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விதை நெல்லை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய விதை நெல்லை தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே வேளாண்துறை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விதை நெல்லை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்கிட வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இடுபொருட்களையும் காலத்தோடு வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
