பாரதிதாசன் மகளிர் கல்லுாரி எதிரே புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை
பாரதிதாசன் மகளிர் கல்லுாரி எதிரே புதிய நிழற்குடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 03, 2026 10:34 PM
புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரி எதிரே அச்சுறுத்தி வரும் நிழற்குடையை அகற்ற வேண்டும் என, முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
முத்தியால்பேட்டை பகுதியில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடை நீண்ட காலமாக போதிய பராமரிப்பின்றி சேதம் அடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இந்த நிழற்குடையை அப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவிகள், முதியோர், பெண்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதுள்ள நிலையில், நிழற்குடையின் மேற்கூரை மற்றும் கட்டமைப்புப் பகுதிகள் பலவீனமடைந்து காணப்படுகிறது. இது எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் உயிருக்கு உடைமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுப்பணி துறையின் கட்டடங்கள் சாலை பிரிவு கோட்ட பொறியாளர்கள் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சீரமைக்கக்கூடிய நிலையில் இருந்தால் உடனடியாக சீரமைத்து பயன் பாட்டிற்கு கொண்டு வரவும். சீரமைக்க இயலாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நிழற்குடையை உடனடியாக அகற்றி, அதே இடத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய பயணியர் நிழற்குடையை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
