ADDED : ஜூன் 12, 2024 02:38 AM

புதுச்சேரி: பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புதுநகர் 4வது குறுக்கு தெருவில் நேற்று காலை 8:30 மணிக்கு பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளில் உள்ள கழிப்பறைகள் வழியாக விஷவாயு தாக்கி 16வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
இதனை கண்டித்து ரெட்டியார்பாளையம் பொதுமக்கள் நேற்று இரவு 8.45 மணியளவில் புதுச்சேரி-விழுப்புரம் சாலை ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் சந்திப்பு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்த வடக்கு எஸ்.பி., வம்சித்தி ரெட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில் பொதுமக்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் கழிவறைக்கு செல்வதற்கு பயப்படுகின்றனர். இதற்கு அரசு துாரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து நள்ளிரவு 11.10 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால், புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.