எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு ஆடியோ நவடிக்கை கோரி சாலை மறியல்
எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு ஆடியோ நவடிக்கை கோரி சாலை மறியல்
ADDED : ஜூலை 29, 2026 11:50 PM
புதுச்சேரி: எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு ஆடியோ பதிவு செய்தவர் மீது நவடிக்கை எடுக்கக் கோரி, வழுதாவூர் சாலையில் நேற்று இரவு நடந்த மறியலால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி தெற்கு பாரதிபுரத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 37. இவர் கதிர்காமம் தொகுதி எம்.எல்.ஏ., அழகானந்தம் ஆதரவாளர். நேற்று காலை கதிர்காமம் தொகுதி தெற்கு பாரதிபுரம் பகுதியில் வாய்க்கால் துார் வாரும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் அழகானந்தம் எம்.எல்.ஏ., பங்கேற்றார். இதுதொடர்பான புகைப்படத்தை பார்த்திபன் அவரது வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் எம்.எல்.ஏ., குறித்து அவதுாறு ஏற்படுத்தும் வகையில் ஆடியோ ஒன்றை அனுப்பினார்.
இதுகுறித்து பார்த்திபன் மேட்டுப்பாளையம் போலீசில் நேற்று காலை புகார் அளித்தார். ஆனால் சதீஷ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று இரவு 9:00 மணியளவில் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது திடீரென அவர்கள், போலீஸ் நிலையம் எதிரே வழுதாவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
