ADDED : ஜூன் 02, 2026 05:00 PM
புதுச்சேரி: சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து 2 வது நாளாக அகற்றப்பட்டது.
கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்படி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சாலைகளின் அழகியலை பாதிக்கும் பிற செயல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இப்பணி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
அதன்படி நேற்று முன்தினம் மிஷன் வீதி – எஸ்.வி.படேல் சாலை சந்திப்பு முதல் நேரு வீதி வரை உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, நேற்று 2வது நாளாக நேரு வீதி முதல் புஸ்சி வீதி வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் கலந்துகொண்டு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதைத்தொடர்ந்து, 3வது நாளான இன்று (3ம் தேதி) காந்தி வீதி, முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் அஜந்தா சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன.
