உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசித்தவர் மீட்பு
உடல்நலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசித்தவர் மீட்பு
ADDED : மே 31, 2026 10:51 PM
புதுச்சேரி: சாரோன் சொசைட்டி ஆப் புதுச்சேரி மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சாலையோரம் வசித்தவரை மீட்டு குடும்பத்தோடு சேர்த்து வைத்தனர்.
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஸ்மைல் திட்டத்தின் கீழ், புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை மற்றும் சாரோன் சொசைட்டி ஆப் புதுச்சேரி இணைந்து யாசகர் இல்லா புதுச்சேரியை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இக்குழு சாலையோரம் வசிப்பவர்களின் தகவல்களை பெற்று, போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை மீட்டு, சுத்தம் செய்து, சிகிச்சை அளித்து, பராமரித்து வருகிறது. மேலும் அவர்களிடம் தகவல்களை கேட்டு பெற்று, அதன்மூலம் அவர்களது குடும்பத்தாரோடு சேர்த்தும் வருகிறது.
இக்குழுவிற்கு தாகூர் கலைக் கல்லுாரி மைதானத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில், முதியவர் வசித்து வருவதாக கடந்த 27ம் தேதி தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் உதவியுடன் சாரோன் சொசைட்டி நிறுவனர் மோகன் தலைமையில், புஷ்பகாந்தி முதியோர் இல்ல நிர்வாகி சுகுனா, ராஜாகுமார், சமூக பணியாளர் ஜெயஸ்ரீ, காயத்ரி, ஐஸ்வர்யா ஆகியோர் அடங்கிய குழு அங்கு சென்று, முதியவரை சுத்தம் செய்து, மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது. பின், காப்பகத்திற்கு அழைத்து வந்து பராமரித்து வந்தனர். அவரிடம் விசாரத்ததில் அவர் செஞ்சியை சேர்ந்த ராஜா, 67; என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரது சகோதரர் ஏழுமலையை புதுச்சேரி வரவழைத்து, லாஸ்பேட்டை போலீசார் முன்னிலையில் நேற்று ராஜாவை சாரோன் சொசைட்டி குழுவினர் ஒப்படைத்தனர்.
