ADDED : ஜூலை 26, 2026 06:31 PM
புதுச்சேரி: வாணரபேட்டையில் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாணரபேட்டை, நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கிருந்து கத்தியுடன் தப்பி ஓட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், வாணரபேட்டை, நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளங்கோவன் மகன் தீனு (எ) தீனதயாளன், 29; என்பதும், ரவுடியான அவர் மீது வெடிகுண்டு வீச்சு, அடிதடி, வழிபறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து, தீனதயாளனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப் பதிந்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
