/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: டாக்டர் கைது
/
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: டாக்டர் கைது
ADDED : மே 05, 2024 05:55 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில், சிகிச்சைக்கு வந்த கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய கல்லுாரி மாணவி, விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் எம்.ஏ., படித்து வருகிறார். இவர், சில நாட்களுக்கு முன்பு, விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தனியார் எலும்பு முறிவு மற்றும் பிசியோதெரபிஸ்ட் மருத்துவமனைக்கு, இடுப்பு வலி பாதிப்பிற்காக சிகிச்சைக்கு சென்றார். மாணவி கடந்த 3 நாட்களாக அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு, விழுப்புரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டர் சந்தோஷ்குமார்,36; சிகிச்சை அளித்துள்ளார். அப்போது, மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த டாக்டரை எச்சரித்துவிட்டு வெளியே வந்து, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த மாணவியின் உறவினர்கள், மருத்துவமனைக்கு வந்து டாக்டர் சந்தோஷ்குமாரை சராமரியாக தாக்கினர். காயமடைந்த டாக்டர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கொடுத்த புகாரில், சந்தோஷ்குமார் மீது பாலியல் தொந்தரவு செய்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
இந்நிலையில், டாக்டரை கைது செய்யக்கோரி, மாணவி தனது உறவினர்களுடன் நேற்று எஸ்.பி., தீபக் சிவாச்சை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சிகிச்சை முடிந்ததும் டாக்டர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.