திண்டிவனத்தில் சென்டர் மீடியனில் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்து சேதம்
திண்டிவனத்தில் சென்டர் மீடியனில் டேங்கர் லாரி மோதி தீப்பிடித்து சேதம்
ADDED : ஜூலை 01, 2026 07:21 PM

திண்டிவனம்: திண்டிவனம் அருகே பால் ஏற்றி வந்த டேங்கர் லாரியின் பின்பக்க டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் தாலுகா, கே.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், 66; டேங்கர் லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு டேங்கர் லாரியில் (டி.என்28 ஏ.சி5155) திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்துாரிலிருந்து 15 ஆயிரம் லிட்டர் பாலை ஏற்றிக்கொண்டு, மேல்மருவத்துார் நோக்கி சென்று கொண்டிந்தார்.
லாரி நேற்று அதிகாலை 1:00 மணியளவில், திண்டிவனம்–செஞ்சி சாலையிலுள்ள தீவனுார் கூட்ரோடு அருகே வந்தபோது, லாரியின் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சென்ட்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் டீசல் டேங்க் உடைந்து தீப்பற்றியதால் டேங்கர் லாரி முழுவதும் தீ பரவியது. உடன் டிரைவர் லாரியிலிருந்த குதித்து உயிர்தப்பினார். தகவல் அறிந்த ரோஷணை போலீசார், திண்டிவனம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் லாரியின் பெரும்பகுதி முற்றிலும் எரிந்து சேதமானது. லாரியில் கொண்டு வந்த 15 ஆயிரம் லிட்டர் பாலும் வீணானது. இந்த விபத்தால் திண்டிவனம்–செஞ்சி பிரதான சாலையில்ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
