புதிய ஒப்பந்த பேராசிரியர்கள் நியமிப்பதை நிறுத்த வேண்டும்
புதிய ஒப்பந்த பேராசிரியர்கள் நியமிப்பதை நிறுத்த வேண்டும்
ADDED : ஜூலை 19, 2026 08:01 PM
புதுச்சேரி: அரசு கல்லுாரிகளில் பணி புரியும் ஒப்பந்த உதவி பேராசிரியர்களை நீக்கி விட்டு புதிய ஒப்பந்த உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதை நிறுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி அரசு கல்லுாரி ஆசிரியர் நலச் சங்க பொதுச்செயலாளர் பாலமுருகன், கவர்னர் மற்றும் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதியில் பணி புரியும் 103 ஒப்பந்த உதவி பேராசிரியர்கள் கடந்த 2020ம் ஆண்டு அரசு நேர்முக தேர்வு மூலம் நியமனம் விதிகளுக்குட்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அரசு கல்லுாரிகளில் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த கல்வியாண்டிற்கான (2026–27) ஒப்பந்த உதவி பேராசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பணியில் உள்ள உதவிப் பேராசிரியர்களின் 40 வயதை கடந்து செல்வதால் இவர்கள் புதியதாக விண்ணப்பிக்க முடியாத நிலை மட்டும் இல்லாமல், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.
புதிய ஒப்பந்த உதவிப்பேராசிரியர்களை நியமிப்பது சட்ட விரோதமாகும். இந்த செயல் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஏற்கனவே உள்ள 103 ஒப்பந்த உதவிப்பேராசிரியர்களை மத்திய தேர்வாணையம் மூலம் நிரந்தர தேர்வு செய்யப்படும் வரை பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
