ADDED : ஜூன் 14, 2024 05:59 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் பாதாளசாக்கடை திட்டம் தோல்வியடைந்துள்ளது என, அ.தி.மு.க., மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரியில் பாதாள சாக்கடை திட்டம் படுதோல்வியடைந்துள்ளது. ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் பாதாள சாக்கடையில் தேங்கிய கழிவுநீரில் விஷவாயு உற்பத்தியாகி வீடுகளில் கழிவறைக்குள் புகுந்ததால் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்தில் போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் அரசு மெத்தனமாக செயல்பட்டது.இதற்கு முதல்வர் தான் காரணம்.
அமைச்சர்கள் தன்னிச்சையாக செயல்பட அவர் அனுமதிப்பதில்லை. அமைச்சர்களின் துறைகளில் முதல்வரின் தலையீடு உள்ளது.
மாநில அதிகாரிகள் தனது உத்தரவின்றி சிறு வேலையைக்கூட செய்ய முடியாது. இதுவே உயிரிழப்புக்கும், தொடர் பாதிப்புக்கும் காரணம்.
முத்தியால்பேட்டை தொகுதியிலும் பாதாள சாக்கடை திட்டம் தோல்வியடைந்துள்ளது. பல தெருக்களில் பாதாள சாக்கடையிலிருந்து நாள்தோறும் கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி வருகிறது.
அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. முதல்வர் இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர், கூறியுள்ளார்.