ADDED : ஜூன் 29, 2026 09:41 PM

பாகூர்: கிருமாம்பாக்கம் பகுதியில் 65 லட்ச ரூபாய் செலவில், நான்கு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்சார டிரான்ஸ்பார்மர்களை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம் பகுதியின் மின் தேவை மற்றும் குறைந்த மின்னழுத்த குறைபாடுகளை போக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பில் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருமாம்பாக்கத்தில் 3 இடங்களிலும், பனித்திட்டு சுனாமி நகரில் ஒரு இடத்திலும் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்பாட்டிற்கு அர்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூஜை செய்து வைத்து, டிரான்ஸ்பார்மரை இயக்கி வைத்தார்.
முன்னதாக, கிருமாம்பாக்கம் பொறையாத்தம்மன் கோவில் அருகே 18 லட்ச ரூபாய் செலவில் புதியதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியினையும், அவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மின் துறை இளநிலை பொறியாளர் பாரதி, என்.ஆர்.காங்., தொகுதி நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
