மொபைல் சர்வீஸ் சென்டரில் திருடிய ஆந்தராவை சேர்ந்த இருவர் கைது
மொபைல் சர்வீஸ் சென்டரில் திருடிய ஆந்தராவை சேர்ந்த இருவர் கைது
ADDED : ஜூன் 16, 2026 07:15 PM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை, மொபைல் சர்வீஸ் சென்டரில் லோப்டாப், ஐபோன், ஏர்போட் திருடிய ஆந்திராவை சேர்ந்த சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, லுார்து நகரை சேர்ந்தவர் அசான் அலி, 32; மணிகூண்டு அருகே மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். கடந்த 12ம் தேதி இரவு, இவரது கடையின் பூட்டை உடைத்து, சர்வீஸ்சிற்கு வந்திருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான 2 லேப் டாப்கள், ஐபோன், மொபைல் மற்றும் ஏர்போட் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கர் திருடிச் சென்றனர்.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, மொபைல் டவர் லோக்கெஷனை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், திருட்டில் ஈடுபட்டவர்கள் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று, மொபைல் சர்வீஸ் சென்டரில் திருடிய ஆந்திரா மாநிலம், ஓங்கல் பகுதியை சேர்ந்த ஜோகி சதீஷ், 19; மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களை புதுச்சேரி அழைத்து வந்து விசாரித்தனர். அதில், ஆந்திராவைச் சேர்ந்த நகுரான், ஜோகி சதீஷ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 10ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா வந்து, ஆரோவில் பகுதியில் அறை எடுத்து தங்கினர். கடந்த 12ம் தேதி நகுரான், ஜோகி சதீஷ் மற்றும் ஒரு சிறுவன் என, மூன்று பேர் முத்தியால்பேட்டையில் உள்ள மொபைல் சர்வீஸ் சென்டரில் இருந்து 2 லேப்டாப், ஐபோன், மொபைல், ஏர்போட் உள்ளிட்டவைகளை திருடியதுடன், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் மொபைல் மற்றும் பணத்தை திருடி கொண்டு ரயில் மூலம் ஆந்திராவிற்கு தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஜோகி சதீஷ் மற்றும் சிறுவனிடம் இருந்து ஒரு லேப்டாப், ஐபோன், ஒரு மொபைல், 2 ஏர்போட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜோகி சதீைஷ காலாப்பட்டு சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நகுரான், ஏற்கனவே திருட்டு வழக்கில் ஆந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை கோர்ட் அனுமதி பெற்று, புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
