என்.எல்.சி., பங்குகளை விற்க திட்டம் விஷ்ணுபிரசாத் கடும் எதிர்ப்பு
என்.எல்.சி., பங்குகளை விற்க திட்டம் விஷ்ணுபிரசாத் கடும் எதிர்ப்பு
ADDED : ஜூன் 27, 2026 08:02 PM
கடலுார்: என்.எல்.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்க அனுமதிக்க மாட்டோம் என, கடலுார் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
என்.எல்.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழை, எளிய மக்களின் நிலங்களை அடிப்படியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.
தொடர்ந்து லாபகரமாக செயல்பட்டு வரும் நிறுவனமாகும். எனவே, இந்த நிறுவனத்தின் பங்குகளை ஏன் விற்க வேண்டும், பங்குகளை விற்பதன் மூலம் என்ன கிடைக்கும்? வருவாய் மத்திய அரசுக்கே சென்றடையும். ஏர் இந்தியா நிறுவனத்தையும் தனியார் மயமாக்கும் திட்டமா, லாபகரமாக இயங்கி வரும் நிறுவனத்தின் பங்குகளை விற்கக்கூடாது.
நிர்வாகமும் துறையின் அமைச்சரும் பிரதமரிடம் நற்பெயர் பெற வேண்டும் என்பதற்காக நிறுவனத்தின் பங்குளை விற்பதற்கு ஒத்துழைத்து வருவதாக தெரிகிறது. என்.எல்.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்க அனுமதிக்க மாட்டோம் .
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
