ADDED : மே 09, 2026 08:31 PM
நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ., சார்பில் 10 பேர் போட்டியிட்டனர். இதில் கண்டிப்பாக 8 வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என கட்சி தலைமை எண்ணி இருந்தது. ஆனால் நமச்சிவாயம், ஜான்குமார், ராஜசேகர், மீனாட்சிசுந்தரம் ஆகிய 4 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை, குஷ்பூ உள்ளிட்ட பிரபலமானவர்கள் தீவிர பிரசாரம், தாராளமாக செய்யப்பட்ட செலவுகள் உள்ளிட்டவை காரணமாக தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் செல்வம், கட்சித் தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் கல்யாணசுந்தரம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தோல்வியை தழுவியது கட்சி தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாஜ., வேட்பாளர்கள் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் காரணமா அல்லது பா.ஜ.,வில் உள்ளவர்களே காரணமா என, கட்சி தலைமை ரகசிய விசாரணை மேற்கொண்டது. அதில், திட்டமிட்டு தோற்கடித்த முக்கியமான 2 கருப்பு ஆடுகளை கட்சியினர் கைகாட்டுகின்றனர். கட்சியினர் கூறிய தகவல்களை சேகரித்து டில்லி தலைமைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சொந்தக் கட்சி வேட்பாளர்களையே திட்டமிட்டு தோற்கடித்த அந்தக் கருப்பாடுகளுக்கு விரைவில் கட்சித் தலைமை கட்டம் கட்டும் என, கட்சியினர் கூறி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறதோ?.
