ADDED : மே 06, 2024 05:05 AM
புதுச்சேரி, : மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால் மகன் விஜயகுமார், 38; தச்சுத் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன், புதுச்சேரி லாஸ்பேட்டை சாந்தி நகர் இளங்கோ வீதியில் வணிக வளாக கட்டுமான பணிக்காக தச்சு வேலைக்கு வந்திருந்தார்.
உறவினர்கள் 4 பேருடன் கடந்த 2 மாதமாக தங்கி, வேலை செய்து வந்தார். நேற்று மரம் அறுக்கும் எந்திரத்தை எடுத்து மரத்தை அறுக்க முயன்றார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி விஜயகுமார் துாக்கி வீசப்பட்டார். படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.