சாயாத சரவணன்குமார் என அழைக்கப்படுவீர்... நாஜிம் எம்.எல்.ஏ., பேச்சால் 'குபீர்'
சாயாத சரவணன்குமார் என அழைக்கப்படுவீர்... நாஜிம் எம்.எல்.ஏ., பேச்சால் 'குபீர்'
ADDED : ஆக 08, 2024 02:02 AM
புதுச்சேரி : சட்டசபையில் திராவிட மாடல், புதுச்சேரி மாடல் குறித்த விவாதம் அனல்பறந்த போது குறுக்கிட்ட அமைச்சர் சாய்சரவணன்குமார், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு ஊழலற்ற ஆட்சி நடக்கிறது. உலகிற்கே மாடலாக ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: உங்களுக்கு ஏதோ வருத்தம் என்று நினைக்கிறேன். அதனால் இப்படி பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள். தமிழக திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவ படிப்புகளுக்கு 65 சதவீத இடங்கள் பெறப்படுகின்றன.
மருத்துவ படிப்புகளுக்கு இவ்வளவு தான் கல்வி கட்டணம் என்று சொல்லிவிட்டால் அதை தாண்டி வாங்க முடியாது. ஆனால் புதுச்சேரியில் 50 சதவீத இடங்களை உங்களால் வாங்க முடியுமா... கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு இருக்கின்றீர்கள். அமைச்சரை போல் எங்களால் பேச முடியும். ஆனால் உங்களால் தாங்க முடியாது.
அமைச்சர் சாய்சரவணன்குமார்: எதற்கு பயப்படமாட்டேன். அச்சமில்லை... அச்சமில்லை. அச்சமென்பதில்லையே. எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் எழுந்து வருவேன். சாய்ந்துவிட மாட்டேன்.
நாஜிம்(தி.மு.க.,): ஓ.. அப்படியென்றால், இன்று முதல் நீங்கள் சாயாத சாய்சரவணன்குமார் என்று அழைக்கப்படுவீர்கள்....
இதனால் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
