ADDED : மே 07, 2026 08:11 PM
புதுச்சேரி: அரியாங்குப்பத்தில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம், மணவெளி சுடலை தெரு அருகே பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு சிலர் கஞ்சா விற்பதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, அங்கு சந்தேகப்படும்படி 2 பைக்குகளில் நின்றிருந்த மூன்று பேர் போலீசாரை கண்டவுடன், அருகிலிருந்த நோணாங்குப்பம் ஆற்றில் குதித்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்து, சோதனை செய்தனர். அவர், கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், வைத்திக்குப்பம், செல்வராஜ் செட்டியார் தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் பரத்குமார், 18, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 பைக்குகள், 2 மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய டி.என்.பாளையம், புது நகர் தேவேந்திரன் மகன் மணி, முத்தியால்பேட்டை, சோலை நகர் குப்புசாமி மகன் தினேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பரத்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.
