விதிகளை மீறி செயல்பட்ட 16 சாராய கடைகளுக்கு 'சீல்' 4 பேர் கைது: கலால் துறை அதிரடி
விதிகளை மீறி செயல்பட்ட 16 சாராய கடைகளுக்கு 'சீல்' 4 பேர் கைது: கலால் துறை அதிரடி
ADDED : ஜூலை 02, 2026 02:03 AM
புதுச்சேரி: குத்தகை காலம் முடிந்த நிலையில் விதிகளை மீறி செயல்பட்ட 16 சாராயக்கடைகளை கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்ததோடு, 4 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சாராயக்கடைகளின் குத்தகை காலம் கடந்த 30ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, கலால் துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில்தாசில்தார்கள் ராஜேஷ்கண்ணா மற்றும் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று அரியாங்குப்பம் மற்றும் பாகூர் கொம்யூன் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஏலம் போகாத நிலையிலும், கலால் விதிகளை மீறி தொடர்ந்து மது விற்பனையில் ஈடுபட்டிருந்த 16 சாராயக்கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். மேலும், சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து 40 மதுக்கடைகளில் சோதனை நடத்தினர்.
கலால் அதிகாரிகள் கூறுகையில், 'இந்த அதிரடி நடவடிக்கை மூலம், புதுச்சேரியில் உரிமம் பெறாத மற்றும் ஏலம் எடுக்காத சாராயக்கடைகள் செயல்படுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கள் மற்றும் சாராயக்கடைகளில் ஆய்வு செய்யப்படும்' என்றனர்.
