ADDED : டிச 22, 2024 06:59 AM
வேப்பூர் : வேப்பூர் அருகே தனியார் பள்ளி பஸ் மீது லாரி மோதியதில், மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.
வேப்பூர் அடுத்த கழுதுாரில் உள்ள தனியார் பள்ளி பஸ் நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம், ஆசனுாரில் 18 மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளிக்கு புறப்பட்டது.
பஸ்சை, உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த ராமலிங்கம், 53, ஓட்டினார். காலை 8:15 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அடுத்த கோமுகி ஆற்று மேம்பாலம் அருகே வந்தபோது, பஸ் மீது பின்னால் வந்த லாரி மோதியது.
இதில், பள்ளி மாணவர்கள் ஆசனூரை சேர்ந்த தட்சிணவேந்தன், 11, ஆகாஷ், 14, வேப்பூர் அடுத்த வலசையை சேர்ந்த சுஜித் கிரண், 12 ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பஸ்சில் பயணித்த 15 பள்ளி மாணவர்கள் காயமின்றி தப்பினர்.
வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
