ADDED : செப் 06, 2026 05:41 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் ஷண்முகா நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி சிவசக்தி, 46. இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து கொண்டு, துணி தைக்கும் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், எதிர் வீட்டை சேர்ந்த கவுதமி என்பவருக்கு இடையே வாய் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்தது.
கடந்த ஜூலை 30ம் தேதி இரவு சிவசக்தி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கவுதமி மற்றும் அவரது அக்கா அம்முகுட்டி ஆகியோர் சிவசக்தியை ஆபாசமாக திட்டி, தாக்கினர். மேலும், சிவசக்தியின் மொபைல் போனை எடுத்து கொண்டு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவசக்தி இதுகுறித்து நேற்று முன்தினம் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், கவுதமி, அம்முகுட்டி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
