ADDED : ஏப் 02, 2025 03:58 AM
பாகூர்: கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 25; கார் டிரைவர். இவர் நேற்று காலை சுமார் 9.00 மணியளவில், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள், அவரது வீட்டிற்குள் புகுந்து அறிவாளால், வெட்டினர். உடன் வீட்டிலிருந்து அவரது தாய் இந்துமதி 45; கூச்சலிட்டபடி தடுக்கவே அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தொடர்ந்து அவர் கூச்சலிடவே, அந்த கும்பல் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றது.
இதில், படுகாயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அதே பகுதியை சேர்ந்த ரவுடி புகழ் என்பவருடன் நட்பில் இருந்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஜார்ஜ் பெர்னாண்டஸ், புகழுடனான நட்பை நிறுத்தி விட்டு, கார் டிரைவர் வேலைக்கு சென்று வருகிறார்.
இதனால், ஆத்திரமடைந்த புகழ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, மிரட்டல் விடுக்கும் வகையில், அவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றது தெரியவந்தது. புகழ் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கிருமாம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
