/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறிவு பசியை போக்கி அமுது படைக்கும் ரோமன் ரோலண்ட் நுாலகம்
/
அறிவு பசியை போக்கி அமுது படைக்கும் ரோமன் ரோலண்ட் நுாலகம்
அறிவு பசியை போக்கி அமுது படைக்கும் ரோமன் ரோலண்ட் நுாலகம்
அறிவு பசியை போக்கி அமுது படைக்கும் ரோமன் ரோலண்ட் நுாலகம்
ADDED : அக் 20, 2024 04:35 AM

புதுச்சேரி கவர்னர் மாளிகையொட்டி, கடற்கரையோரமாக, சிந்தனையாளர்களின் கருத்துகளை நுால்கள் வடிவில் பேணி பாதுகாத்து, இன்றைய தலைமுறையினரின் மனதில், விதைகளாக விதைத்து வருகிறது ரோமன் ரோலண்ட் நுாலகம். இந்தியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய பழமையான நுாலகங்களில் இதுவும் ஒன்று.
தமிழர்களை போலவே கலை, இலக்கியம், பண்பாட்டுகளில் தாக்கம் கொண்ட பிரெஞ்சியர்கள், அவர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியிலும் ஒரு பொது நுாலகத்தை 16.05.1827 அன்று பிப்ளியோ தெக் புய்ப்ளிக் என்ற பெயரில் ஆரம்பித்தனர்.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் அப்போதைய கவர்னர் தெபாசென் த ரிஷ்மோன். பொது நூலகம் என்ற பெயரில் துவங்கப்பட்டாலும் ஐரோப்பியர்களும், அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருந்த செல்வந்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் பிரெஞ்சு மொழியை கற்றுக் கொள்ளவும், அதனைக் கற்றுக்கொண்ட பிரெஞ்சு பூர்வகுடிகள் தங்களின் மொழி ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகவும் அந்த தடை படிப்படியாக நீக்கப்பட்டு 1837 க்கு பிறகே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆரம்ப காலத்தில் இந்த நுாலகம் ரயில் நிலையம் அருகே மகாசன் ழெனேரால் என்ற பகுதியில் இருந்தாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இந்த நுாலகத்தில் 1852 செப்டம்பர் 9 தேதி ஒரு ஆவணப் பிரிவு ஒன்றும் துவங்கப்பட்டது.
இவை இரண்டும் 1884 இல் தற்போதைய புஸ்சி வீதி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் இயங்கி வந்தது.
அதன் பிறகு கப்பூசின் தெருவிற்கு நுாலகம் மாற்றப்பட்டது. 1967ல் ஆகஸ்ட் 27 ம் தேதி கம்பூசியன் தெருவில் இருந்த நுாலகத்திற்கு ரோமன் லோலண்ட் பொது நுாலகம் என்ற பெயர் வைக்கப்பட்டது. பிரெஞ்சு அறிஞர் ரோமன் ரோலண்ட்டிற்கு 1915 ம் ஆண்டு இலக்கியத்திற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அவரது நுாற்றாண்டு விழா 1966ல் இந்தியாவிலும் கொண்டாடப்பட்டது.
இதன் காரணமாகவே, காந்தி, ரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய நண்பருமான ரோமன் ரோலண்டை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை புதுச்சேரியின் நுாலகத்திற்கு சூட்டி அழகுபார்க்கப்பட்டது. அத்துடன், அத்தெருவிற்கும் ரோமன் லோலண்ட் வீதி என பெயரிடப்பட்டது.
பின் அந்த நுாலகம், 1974ல் அக்டோபர் 2ம் தேதி முன்பு, வளர்ச்சி துறையாக இருந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதாவது தற்போதைய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.
இதனை அப்போதைய கவர்னர் சேத்திலால் திறந்து வைத்தார். 1839ம் ஆண்டு இந்த நூலகத்தில் இடம் பெற்றிருந்த புத்தகங்களின் எண்ணிக்கை 5013.
இன்றைக்கு பல்வேறு மொழிகளில் 2,40,696 தலைப்புகளில் 4.22 லட்சம் நுால்கள் உள்ளன. 59,604 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
வரலாற்று பெருமை கொண்ட ரோமன் ரோலண்ட் நுாலகம் இன்றைக்கு ஆலமரமாக வளர்ந்து, புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 81 இடங்களில் கிளைகளை பரப்பி புதுச்சேரி மக்களின் அறிவு பசியை போக்கிவருகின்றது.