ADDED : மார் 24, 2025 04:17 AM
காரைக்கால்: காரைக்காலில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் மற்றும் பணம் பறித்துச் சென்ற இரு மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
காரைக்கால் ராசாத்தி நகர், இரண்டாவது தெரு சேர்ந்தவர் கெளது பாரூக் மனைவி ஹஷினா பேகம்,55; இவரது மகன் அப்துல் ரகுமான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறான். கடந்த 19ம் தேதி ஹஷினா பேகம் சுபைதா நகரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக ஷேர் ஆட்டோவில் காமராஜர் சாலையில் உள்ள சமீரா மஹால் அருகே இறங்கி ஹஷினா பேகம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த இரண்டு பேர் கையில் இருந்த கைப்பையை பறித்துகொண்டு தப்பினர்.
இதில் ஹஷினா பேகம் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் ஹஷினா பேகம் வைத்திருந்த பத்தாயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
