ADDED : பிப் 10, 2026 05:04 AM

புதுச்சேரி: இ.சி.ஆரில், சென்டர் மீடியன் இடையே வைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டை அகற்றி விட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் செல்வதால், பெரிய விபத்து நடப்பதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி இ.சி.ஆர்., சாலை கிருஷ்ணா நகர் அருகில், தனியார் மேல்நிலைப்பள்ளி எதிரே தடுப்பு கட்டை உடைத்து வழி ஏற்படுத்தப்பட்டது. உடைக்கப்பட்ட தடுப்பு கட்டை வழியாக பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் குறுக்கே சென்றனர்.
பிரதான சாலை என்பதால், விபத்து நடப்பதை தவிர்க்க உடைக்கப்பட்ட தடுப்பு கட்டையை முழுமையாக மூட வேண்டும் என வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சட்டசபையில் வலியுறுத்தினார். அதன் பின்னர், போலீசார் இரும்பு பேரிக்கார்டை அந்த இடத்தில் வைத்து அடைத்தனர்.
இந்நிலையில், பொதுமக்களும், பள்ளி மாணவர்களும் இரும்பு பேரிக்கார்டை அகற்றி விட்டு, சாலையை கடந்து வருகின்றனர். ஒரு பக்க சாலையில் இருந்து மற்றொரு பக்க சாலையை பொதுமக்கள் கடக்கும் போது, வேகமாக வரும் வாகனங்கள் விபத்து ஏற்படுத்தும் அபாய நிலை உள்ளது. பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள், இரும்பு பேரி கார்டை அகற்றி விட்டு, அந்த இடத்தில் சிமென்ட் தடுப்பு கட்டையை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

