காலநிலை மாற்றத்திற்கு ஏ.ஐ., தீர்வுகள் அவசியம்: பல்கலை துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேச்சு
காலநிலை மாற்றத்திற்கு ஏ.ஐ., தீர்வுகள் அவசியம்: பல்கலை துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேச்சு
UPDATED : ஆக 30, 2026 07:23 PM
ADDED : ஆக 30, 2026 07:21 PM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் இயங்கும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் மையம் சார்பில், 'நிலையான சுற்றுச்சூழலுக்கான முன்னேற்றமிக்க புதுமைத் தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
மாநாட்டை துவக்கி வைத்து துணைவேந்தர் பிரகாஷ் பாபு பேசுகையில், 'காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் பேரிடர்கள் ஏற்பட துவங்கிவிட்டன. இந்த காலநிலை பேரிடர்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த சுற்றுச்சூழல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியதன் அவசியம். 2047க்குள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கினை நாடு அடையும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் புதுமையான தீர்வுகளை உருவாக்க வேண்டும்' என்றார்.
மாநாட்டில் செந்தில்குமார் எழுதிய 'சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளை நீக்குவதற்கான உயிரி உறிஞ்சிப் பொருட்கள்' என்ற ஆய்வு நுாலை துணைவேந்தர் பிரகாஷ் பாபு வெளியிட்டார்.
சிறப்பு அமர்வில் எல் அண்ட் டி நிறுவனத்தின் நீர் தொழில்நுட்ப மைய மூத்த துணைப் பொது மேலாளர் கணேஷ் குமார், கழிவுநீர் சுத்திகரிப்பு நானோ தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
தைவானின் யுவான் சே பல்கலைக்கழகப் பேராசிரியர் குவான்-ஷியாங் கூ, மலேசியாவின் துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகப் பேராசிரியர் லிம் ஹூய் ரென் சிறப்புரையாற்றினர்.
நீர்ப்பற்றாக்குறை, மாசுபாடு, கழிவு மேலாண்மை போன்ற சவால்களுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இம்மாநாட்டில், பல்வேறு ஆய்வாளர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கும், அறிவியல் பூர்வமான தீர்வுகள் இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
