ADDED : டிச 14, 2025 05:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஆல்பா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி காவிய ஸ்ரீ, இளம் திறமையாளர்களுக்கான 'கீர்த்தி புரஸ்கார்' விருது மற்றும் நடனத்திற்கான தமிழக அரசின் சிறப்பு விருது பெற்று சாதனை படைத்துள்ளார்.
நான்கு வயது முதல் பரதம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவி காவிய ஸ்ரீ, பரதத்தில் செய்த சாதனைகளை போற்றும் வகையில் 'இளம் சாதனையாளர் விருதை' காவேரி கலை பண்பாட்டு மையம் வழங்கி கவுரவித்தது.
இந்தாண்டு ராஜராஜ சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு நடத்திய நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, சிறந்த நடனத்திற்கான சிறப்பு விருது மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றார்.
பரத நாட்டியத்தில் புதுமை படைக்கும் விதத்தில் ஐகான் விருதினை விருதுகளையும் பெற்றுள்ளார். இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் உலக நடன விளையாட்டு சங்கம் நடத்திய நடன போட்டியில் கலந்துகொண்டு மூன்று தங்க பதக்கங்களை வென்றுள்ளார். பல விருதுகளை பெற்ற மாணவி காவியஸ்ரீயை ஆல்பா குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார்.

