/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் அம்பேத்கர் யாத்திரை திட்டம் துவக்கம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
/
புதுச்சேரியில் அம்பேத்கர் யாத்திரை திட்டம் துவக்கம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
புதுச்சேரியில் அம்பேத்கர் யாத்திரை திட்டம் துவக்கம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
புதுச்சேரியில் அம்பேத்கர் யாத்திரை திட்டம் துவக்கம்: வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
ADDED : மே 06, 2025 04:54 AM

புதுச்சேரி:அம்பேத்கர் யாத்திரை திட்டத்தை புதுச்சேரி அரசு துவங்கியுள்ளது. இதன் மூலம் அட்டவணை இனமக்கள் அம்பேத்கர் வாழ்ந்த இடங்களுக்கு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட உள்ளனர்.
அம்பேத்கரை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் யாத்திரை திட்டத்தை தற்போது புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத் துறை வாயிலாக உருவாக்கியுள்ளது.
அதன்படி, அம்பேத்கர் தொடர்புடைய நான்கு தலங்களுக்கு ஆண்டுதோறும் அட்டவணையின மக்கள் யாத்திரையாக செல்ல உள்ளனர். அம்பேத்கர் யாத்ரா திட்டத்துக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் கூடிய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் அம்பேத்கர் பிறந்த மத்திய பிரதேசத்தில் உள்ள பீம் ஜன்ம பூமி, அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய நாக்பூரில் உள்ள தீக்சை பூமி, அவர் மறைந்த இடமான டெல்லி மகாபரினிவாரன் பூமி, அவர் தகனம் செய்யப்பட்ட மும்பை சைத்ய பூமி, ஆகிய தலங்களுக்கு 9 நாட்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அழைத்து செல்லப்படுவார்கள்.
இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு துறை ஆதிதிராவிடர் நலத் துறை செயல்பட உள்ளது. 2 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் யாத்திரை செல்ல விண்ணப்பிக்கலாம்.
யாத்திரை செல்லும் நபர் 18 வயத்திற்கு கீழ் 50 வயதிற்கு மேல் இருக்க கூடாது.
ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை தம்பதிகளாக இருந்தால் யாத்திரை செல்ல இருவருமே விண்ணப்பிக்கலாம். ஒருவர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே அம்பேத்கர் யாத்திரை திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொள்ள முடியும். நீண்ட நாள் நோய் திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுபவர்கள் இந்த யாத்திரைக்கு விண்ணப்பிக்க முடியாது.
இந்த திட்டத்தின் கீழ் யாத்திரை செல்ல www.edistrict.py.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்ப படிவம் கிடைக்கும். ஆன்லைனில் தான் ஆதார், குடியிருப்பு, பிறப்பு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் உள்பட அனைத்து சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப சீனியாரிட்டி, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் யாத்திரை பயணிகள் தேர்வு செய்யப்படுவர்.
இந்த யாத்திரைக்கு நுழைவு கட்டணம், அனுமதி கட்டணம் உள்பட அனைத்து கட்டணத்தை ஆதிதிராவிடர் நலத் துறையே ஏற்றுக்கொள்கின்றது. எனவே முழுவதும் இலவசமாக அம்பேத்கர் யாத்திரை திட்டத்தை புதுச்சேரி அரசு கொண்டு வந்துள்ளது.

