புதுச்சேரி விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
புதுச்சேரி விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை
UPDATED : ஆக 13, 2026 09:03 PM
ADDED : ஆக 13, 2026 07:41 PM
புதுச்சேரி: விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், புதுச்சேரி விமான நிலையத்தில் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை நடந்தது.
நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், அதற்கான ஒத்திகை மேற்கொள்ளவும் மத்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் உத்தரவிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி விமான நிலையத்தில், அசம்பாவிதங்கள் மற்றும் அவசரக்காலச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகை நடந்தது.
அப்போது, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவின் விரைவு அதிரடிப் படை, போலியாக உருவாக்கப்பட்ட கடத்தல்காரராக வேடமிட்ட நபரை சூழ்ந்து, கைது செய்து, சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
இதில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், புதுச்சேரி மாநிலத் தீயணைப்புத் துறை, மாநில போலீசார், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவக் குழு (ஆம்புலன்ஸ் வசதியுடன்), இண்டிகோ விமான நிறுவனக் குழு, இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஒத்திகையின் ஒருங்கிணைப்பு மற்றும் அவசரக்கால செயல்பாடுகளை சென்னை, தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) அதிகாரி பார்வையிட்டு, ஒட்டுமொத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை ஆய்வு செய்தார்.
துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, அவசரகால நடவடிக்கைகள், ஏரோட்ரோம் கமிட்டி மற்றும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை ஆகியவை உடனடியாகச் செயல் படுத்தப்பட்டு அமைப்புகளுக்கு இடையேயான தகவல் தொடர்பு சோதிக்கப்பட்டது.
இதன் மூலம் அவசரகால சூழ்நிலைகளை எதிர்கொள்ள புதுச்சேரி விமான நிலையம் தயார் நிலையில் இருப்பதும், விமானப் பாதுகாப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யப்பட்டது.
