/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீஸ் பணிக்கு 9,928 பேரின் விண்ணப்பங்கள்... ஏற்பு; வரும் டிசம்பரில் உடற்தகுதி தேர்வு நடத்த திட்டம்
/
போலீஸ் பணிக்கு 9,928 பேரின் விண்ணப்பங்கள்... ஏற்பு; வரும் டிசம்பரில் உடற்தகுதி தேர்வு நடத்த திட்டம்
போலீஸ் பணிக்கு 9,928 பேரின் விண்ணப்பங்கள்... ஏற்பு; வரும் டிசம்பரில் உடற்தகுதி தேர்வு நடத்த திட்டம்
போலீஸ் பணிக்கு 9,928 பேரின் விண்ணப்பங்கள்... ஏற்பு; வரும் டிசம்பரில் உடற்தகுதி தேர்வு நடத்த திட்டம்
ADDED : நவ 19, 2025 05:51 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் பணிக்கு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், வரும் 25ம் தேதிக்குள் சிறப்பு குழுவைஅணுகி தீர்வு காணலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 148 போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பணியிடத்திற்கு கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதில் இப்பணிக்கு மொத்தமாக 10 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை போலீஸ் துறையில் உள்ள ஆள்சேர்ப்பு குழுவால் ஆய்வு செய்யப்பட்டதில், 9 ஆயிரத்து 928 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுவிட்டது.
நிராகரிப்பு எஞ்சிய 135 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளன.
நிராகரிப்பு விண்ணப்ப விபரம் வருமாறு:
இருமுறை விண்ணப்பத்தது 5 பேர், புதுச்சேரி மாநிலத்தை சாராதவர்கள் 6 பேர், விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்து அதற்கான சான்றுகள் இணைக்காதது, வயது வரம்பை கடந்தது 90 பேர், வயது வரம்பிற்குள் வராத பொருளாதாரத்தில் பின் தங்கியோர் (மீனவர்), பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), எஸ்.டி., மற்றும் பி.டி., சமூகத்தை சேர்ந்த பெண்கள்-34 பேர் ஆகியோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறை தீர்வு குழு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் குறைகளை கேட்டறிய போலீஸ் துறை சார்பில் ஒரு குறை தீர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குறைகள் இருப்பின், புதுச்சேரி, போலீஸ் தலைமையக அலுவலகத்தில் உள்ள சிறப்பு அலுவலர், ஏழுமலையை, இன்று 19ம் தேதி காலை 9 மணி முதல் வரும் 25ம் தேதி மாலை 5:45 மணிக்குள் போதிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளுடன் அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2231352 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இறுதி செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை போலீஸ் துறையின் சிறப்பு அலுவலர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ., பணிக்கு
16,000 விண்ணப்பம்
இதேபோன்று, போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதி விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டது. அதில் மொத்தம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் ஆள் சேர்ப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

