ADDED : ஏப் 18, 2026 08:38 PM
வில்லியனுார்: வில்லியனுாரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்த ஆட்டோ டிரைவரை தாக்கிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார், கணுவாப்பேட்டையை சேர்ந்த வேல்முருகன், 39; ஆட்டோ ஓட்டுனரான இவர், கடந்த மாதம் ஆரியப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி, என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதை வில்லியனுார் போலீசாரிடம் தெரிவித்தார்.
அதன்பேரில், பழனி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சில தினங்களுக்கு முன் வேல்முருகன், ஆரியப்பாளையத்தில் உள்ள நண்பரை பார்க்க சென்று திரும்பி வந்தார். அப்போது பழனி மற்றும் அவரது தம்பி ராஜ் ஆகியோர் வழிமறித்து வேல்முருகனை தாக்கினர்.
படுகாயமடைந்த வேல்முருகன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரது புகாரின் பேரில், பழனி மற்றும் ராஜ் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

